தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்தது சிபிஐ!

By காமதேனு

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது.

தஞ்சையை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த பிளஸ்2 மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட தமிழக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மகள் தற்கொலை செய்துக் கொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க கோரி மாணவியின் தந்தை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த மாதம் 31ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

இந்நிலையில், மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டுதல், குற்றம் முயற்சி செய்தல், சிறார் நீதி சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE