உணவு, தங்க வசதியில்லை; என்னை சிறைக்கே அனுப்பிவிடுங்கள்!

By ஆர்.டி.சிவசங்கர்

உணவு மற்றும் தங்கும் வசதியில்லாததால் தன்னை சிறைக்கே அனுப்பி விடக் கோரி, கோடநாடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வாளையாறு மனோஜ், மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள், கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு, பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.

இந்தக் கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல் துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2-வது நபரான வாளையாறு மனோஜ் இரண்டாண்டுகள் சிறையில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. நீலகிரியில் உள்ள 2 நபர் உத்தரவாதம் அளித்தால், ஜாமீன் வழங்கப்படும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ளவர்கள் உத்தரவாதம் அளிக்காத நிலையில், ரத்த சொந்தங்கள் இருவர் உத்தரவாதம் அளிக்கலாம் என நிபந்தனை தளர்த்தப்பட்டது. ஆனால், வாளையாறு மனோஜின் மனைவி மட்டுமே உத்தரவாதம் அளிக்க முன்வந்தார். இதனால், அவர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியேவர முடியவிலல்லை.

இந்நிலையில், அவரது வழக்கறிஞர் முனிரத்னம், ஜாமீன் நிபந்தனையில் தளர்வுவேண்டி உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் மனுத்தாக்கல் செய்தார். இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கின் விசாரணையின் போது, ஜாமீன்தாரர்கள் தத்தம் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரடியாக நிறுத்தப்பட்ட நிலையில், ஆய்வுக்குப்பின் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதனால், வாளையாறு மனோஜ் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

அவர் உதகையிலேயே தங்கியிருந்து, வாரம்தோறும் திங்கள்கிழமை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு நேரடியாக வந்து கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், வாளையாறு மனோஜ், தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்துசெய்து தன்னை மீண்டும் சிறைக்கு அனுப்பக்கோரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தார்.

இதுகுறித்து வாளையாறு மனோஜின் வழக்கறிஞர் முனிரத்னம் கூறும்போது, ‘‘ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரிய மனோஜ், 3 முறை மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு, தங்க இருப்பிடமும், உணவும் கிடைக்கவில்லை எனவும், புலன் விசாரணை என்று கூறி வழக்கை அரசுத்தரப்பு தங்கள் விருப்பத்துக்கு காலம் தாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், தன்னை மீண்டும் சிறைக்கே அனுப்பிவிடக் கோரி உதகை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. விசாரணை நாளை(பிப்.3) நடக்கவிருக்கிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE