நடத்தையில் கணவன் சந்தேகம்... மகளை எரித்துக் கொன்ற தாய்

By காமதேனு

நடத்தையில் கணவன் சந்தேகப்பட்டதால் சத்தியம் செய்வதற்காக பெற்ற மகளையே தாய் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை திருவொற்றியூரில் வசித்து வருபவர் ஜெயலட்சுமி (40). ஏற்கெனவே 2 பேரை திருமணம் செய்து கொண்டு கணவர்களை பிரிந்து வாழ்ந்து வந்த ஜெயலட்சுமி, 3-வதாக திருவொற்றியூர் மேட்டுத்தெருவை சேர்ந்த பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள். 2-வது கணவர் மூலம் பிறந்த 13 வயதான மகள் பவித்ராவும் அவர்களுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஜெயலட்சுமியின் நடத்தையில் பத்மநாபனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அவர்களுக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது பத்மநாபன், மகள் பவித்ரா மீது சத்தியம் செய்யும்படி கூறியுள்ளார். ஆத்திரத்தில் இருந்த ஜெயலட்சுமி வீட்டில் இருந்த மண்எண்ணெயை திடீரென பவித்ரா மீது ஊற்றி தீவைத்துவிட்டு யாருடனும் தொடர்பு இல்லை என்று சத்தியம் செய்துள்ளார். பலத்த காயம் அடைந்த பவித்ராவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பவித்ராவை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து திருவொற்றியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பத்மநாபன், ஜெயலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற மகளையே தாய் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE