சமூக வலைதளத்தில் சர்ச்சைப் பதிவு!- பாஜக இளைஞரணி தலைவர் மீது வழக்கு

By ரஜினி

திமுக ஆட்சிக்கு வந்த உடன் 130 இந்து கோயில்களை இடித்ததாக, சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை பதிவிட்ட பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில், பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தனது சமூக வலைதள பக்கத்தில், திமுக அரசு ஆட்சிக்கு வந்த 200 நாட்களில் 130 இந்து கோயில்களை இடித்துள்ளதாகவும், ஆகையால் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணியை ஆதரிப்பீர் என்று பதிவிட்டதாக, அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு திமுக அரசு குறித்து பொதுமக்களிடம் பொய்யான தகவல்களை பரப்பி, மதக் கலவரத்தைத் தூண்டி அமைதியை சீர்குலைக்கும் வகையில் இந்தப் பதிவு அமைந்திருக்கிறது. எனவே, வினோஜ் பி.செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணைக்குப் பிறகு, பொய்யான தகவலை பரப்பி மதக் கலவரத்தைத் தூண்டும்வகையில் அவரது பதிவு அமைந்துள்ளதால் கலகம் செய்யத் தூண்டுதல், எந்தவொரு பிரிவினருக்கும் அச்சத்தை ஏற்படுத்துவது உட்பட 3 பிரிவுகளின்கீழ் வினோஜ் பி.செல்வத்தின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE