முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகள் அரசு சின்னங்களைப் பயன்படுத்தத் தடை விதித்து தமிழக காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை முன்னாள் நாடளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், பொதுத் துறை நிறுவன அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், பல்வேறு ஆணையங்களில் இருந்து ஓய்வுபெற்றவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர்களாகவும், கொடிகளாகவும், பெயர்ப் பலகைகளாகவும் பயன்படுத்தி வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியிருந்தது.
மேலும், கடிதங்களிலும் அரசுச் சின்னங்கள் தவறாக பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்ட நீதிமன்றம், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் அரசு விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட பதவியில் உள்ள முக்கிய நபர்கள், அதிகாரிகளைத் தவிர மற்றவர்கள் யாரும் அரசு சின்னங்களைப் பயன்படுத்தக்கூடாது என தமிழக காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அரசின் சின்னங்களைத் தங்கள் வாகனங்களில் முத்திரையாகவும், லெட்டர் பேடு மற்றும் விசிட்டிங் கார்டுகளில் பதிந்தோ பயன்படுத்தக் கூடாது எனவும் தமிழக காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மத்திய அரசின் சின்னங்கள் மற்றும் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்துதலுக்கு எதிராக மாநில அரசு சின்னங்கள் மற்றும் பெயர்கள் தடைச்சட்டம் 1950 மற்றும் விதிகள் 1982-ன்படியும், இந்திய அரசு சின்னங்கள் தடைச்சட்டம் 2005-ன்படியும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு முழு அதிகாரம் உள்ளது எனவும், இச்சட்டங்கள் மீறப்படும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகாரளிக்கலாம்’ எனவும் தெரிவித்துள்ளார்.
காவல் துறையினர் அரசு சின்னங்கள் மற்றும் பெயர்களை அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்துவோர் மீது, குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கவும் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் வாகனங்களின் பதிவு எண் பலகைகள் அல்லது வாகனத்தின் வேறுபகுதிகளில் அரசு சின்னங்கள் மற்றும் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது பிரிவு 177 மோட்டார் வாகனச் சட்டம் 1988 மற்றும் பிரிவு 50, 51 மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ன்படி நடவடிக்கை எடுக்கவும் டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
அரசுச் சின்னத்தை அனுமதியின்றி பயன்படுத்துவோரின் வாகனங்களை சாட்சிகள் முன்னிலையில் காவல் துறையினர் பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு பறிமுதல் செய்யப்படும்போது, அதைக் காணொலி காட்சியாகப் பதிவு செய்யவேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.