பனங்காட்டுப்படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கைது!

By காமதேனு

ரூ.16 கோடி மோசடி புகாரில் கைதாகி பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை தமிழகக் காவல் துறையினர் இன்று (ஜன.19) கைது செய்தனர்.

பிரபல தமிழ் பட நடிகை விஜயலட்சுமி கடந்த 2020-ம் ஆண்டு வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். அப்போது திருவான்மியூர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் மற்றும் சதா ஆகியோர் தன்னை மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக விஜயலட்சுமி கூறியிருந்தார். இதையடுத்து திருவான்மியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஏற்கெனவே ரூ.16 கோடி பண மோசடி வழக்கு ஒன்றில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை, திருவான்மியூர் காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர். விஜயலட்சுமி தற்கொலை வழக்கு தொடர்பாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை கைதுசெய்ய அனுமதிக்கக்கோரி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு, திருவான்மியூர் ஆய்வாளர் கடிதம் எழுதியிருந்த நிலையில் அவரை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, வெங்களூரு சிறையில் இருந்து நாளை ஹரி நாடாரை சென்னை அழைத்து வரும் காவல் துறையினர், சைதாப்பேட்டை 18-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE