குடும்ப தகராறில் ஆட்டோ ஓட்டுநர் விபரீத முடிவு: 2 குழந்தைகளை கொன்று, தற்கொலை!

By ரஜினி

குடும்ப தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்ததுடன், தானும் குதித்து தற்கொலை செய்திருக்கிறார்.

சென்னை புதுப்பேட்டை பச்சையப்பன் முதலி தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஞானவேல். இவரது சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்து விட்டதால், இரண்டாவதாக ஜெயந்தி(38) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா(6), பூஜாஸ்ரீ(4) என 2 மகள்கள் உள்ளனர்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஞானவேல், தினமும் குடித்து விட்டு வந்து மனைவி மீது சந்தேகம் கொண்டு தகராறில் ஈடுபடுவாராம். இதேபோல் ஜன.15 பொங்கலன்று மது அருந்தி விட்டு வந்த ஞானவேல் வழக்கம் போல் தனது மனைவியுடன் தகராறு செய்தாராம். இதனால் கணவன் மனைவி இடையே கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவர் ஞானவேல் தனது குழந்தைகள் ஐஸ்வர்யா, பூஜாஸ்ரீ ஆகிய இருவரையும் அழைத்து கொண்டு வேளச்சேரியில் உள்ள தனது உறவினர் அன்பழகன் வீட்டிற்கு சென்றுள்ளார். குழந்தைகளுடன் சென்ற ஞானவேல் மறுநாள் வரை வீடு திரும்பாததால் பதற்றமடைந்த ஜெயந்தி, கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். உறவினர் வீட்டில் இருப்பதாகவும், விரைவில் வீட்டிற்கு வருவதாக ஞான்வேல் தெரிவித்துள்ளார்.

ஞானவேல்

ஐஸ்வர்யா

பூஜாஸ்ரீ

ஆனால் அவ்வாறு ஞானவேல் மற்றும் குழந்தைகள் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த ஜெயந்தி ஞானவேல் உறவினரை தொடர்பு கொண்டு விசாரித்திருக்கிறார். ஞானவேல் மற்றும் குழந்தைகள் ஏற்கனவே சென்றுவிட்டதாக அந்த உறவினர் தெரிவித்திருக்கிறார்.

நேற்று வரை அவர்கள் வீடு திரும்பாததால் இது தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் ஜெயந்தி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீஸாருக்கு, இன்று(ஜன.19) காலை மறைமலைநகர் பகுதியிலுள்ள கிணற்றில் 3 சடலங்கள் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் 3 சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிரிழந்த நபர்கள், எழும்பூரில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த ஆட்டோ டிரைவர் ஞானவேல் மற்றும் அவரது 2 குழந்தைகள் என தெரியவந்தது. குடும்பத் தகராறில் மனைவியிடம் கோபித்துக் கொண்டு வந்த ஞானவேல், தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்ததுடன் தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இவை தொடர்பாக ஞானவேலின் மனைவி ஜெயந்தியிடமும், சம்பவ இடத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE