‘பூஸ்டர் டோஸ்’ அழைப்பில் புதிய மோசடி; எச்சரிக்கும் காவல் துறை

By ரஜினி

கரோனா பூஸ்டர் டோஸ் போடுவதாக செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி(எஸ்எம்எஸ்) மூலம் புதிதாக மோசடி நடைபெறுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கரோனா தடுப்பூசி 2 தவணைகளும் செலுத்திக் கொண்டோர், 2-ம் தவணைக்குப் பிறகு 9 மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகி்ன்றது. அதேபோல் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்கள், பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்குப் பல்வேறு ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் பொதுமக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதாகவும், விருப்பம் உள்ளோர் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு செல்போன் எண்ணுக்கு அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வருகின்றன.

கூடவே, லிங்க் ஒன்றை அனுப்பி, அதில் விவரங்களைப் பதிவிடுமாறு தெரிவிப்பதுடன் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபியைக் கேட்டுப் பெற்று, நூதன முறையில் புதிய மோசடி நடைபெறுவதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் லிங்க் மற்றும் ஓடிபி மூலம் செல்போனை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, செல்போன் எண்ணுக்குரியோரின் வங்கிக் கணக்கில் இருந்து மோசடி கும்பல் பணத்தைத் திருடுவதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி, லிங்க்குகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என பொதுமக்களை சைபர் கிரைம் போலீஸார் கேட்டு கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE