டிஎஸ்பியை லாரி ஏற்றிக் கொல்ல முயன்றாரா நடிகர் திலீப்?

By காமதேனு

நடிகையை பலாத்காரம் செய்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பியை கொல்ல சதி திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பிடம் விரைவில் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

பிரபல நடிகை ஒருவர், கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் மலையாள நடிகர் திலீப் உட்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு இப்போது மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், திலீப்பிடம் கொடுக்கப்பட்டதாகவும் அதை அவர் அதிக சத்தத்துடன் பார்த்தது தனக்குத் தெரியும் என்றும் திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலச்சந்திர குமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை விசாரித்த விசாரணை நீதிமன்றம், வரும் 20-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய போலீஸுக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து டிஎஸ்பி பைஜு பவுலோஸ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பாலச்சந்திரகுமாரிடம் விசாரணை நடத்தியது.

அப்போது, விசாரணை அதிகாரி டிஎஸ்பி பைஜு பவுலோசை லாரி ஏற்றி கொல்ல நடிகர் திலீப், அவர் தம்பி அனூப் உட்பட 4 பேர் சதித்திட்டம் தீட்டியதாகத் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில், நடிகர் திலீப்பிடமும் பாதிக்கப்பட்ட நடிகையிடமும் விரைவில் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE