முன்னாள் காதலனை ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த கல்லூரி மாணவி

By ரஜினி

தன்னைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்த முன்னாள் காதலனை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கல்லூரி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேசப்பிரியா(23). இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது, அதே கல்லூரியில் பணியாற்றி வந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்(44) என்பவருடன் அறிமுகமாகி இருக்கிறார்.

செந்தில் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி மாணவியிடம் சகஜமாக நட்பை வளர்த்துக்கொண்டார். இருவரும் நெருங்கிப் பழகி இருக்கின்றனர்.

பின்னர் தேசப்பிரியா, மேற்படிப்புக்காக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், செந்தில் ஏற்கெனவே திருமணமானவன் என்பது தெரியவர, செந்திலின் நட்பை தேசப்பிரியா முறித்துக் கொண்டார்.

அடுத்து தேசப்பிரியாவுக்கு கேளம்பாக்கம் கல்லூரியில் படிக்கும் அருண்பாண்டியன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. இதற்கிடையே செந்தில் தொடர்ச்சியாக தேசப்பிரியாவிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ள தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த தேசப்பிரியா, இது குறித்து நண்பர் அருண்பாண்டியனிடம் தெரிவித்துள்ளார். இருவரும் செந்திலை தீர்த்து கட்ட திட்டம் தீட்டி, இன்று மாலை செந்திலை கேளம்பாக்கம் நெடுஞ்சாலைக்கு வரவழைத்துள்ளனர்.

அங்கு வந்த செந்தில் தேசப்பிரியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தேசப்பிரியாவும், நண்பர் அருண்பாண்டியனும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்திலை நடுரோட்டில் வைத்து குத்திக் கொலை செய்தனர். இதில் செந்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அங்கிருந்த பொதுமக்கள் தேசப்பிரியா, அருண்பாண்டியன் இருவரையும் பிடித்து கேளம்பாக்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் செந்தில் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேசப்பிரியா, அருண்பாண்டியன் இருவரையும் கைது செய்த போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE