இருசக்கர வாகன திருடில் ஈடுபட் 4 இளஞ்சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்ப்பு @ சென்னை

By KU BUREAU

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்ற 4 இளஞ்சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, கொளத்தூர், செல்வி நகர் 5-வது தெருவில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 26.05.2024 அன்று இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு, மறுநாள் காலை வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து சுப்பிரமணி, V-4 ராஜமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

V-4 ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை செய்து, மேற்படி இருசக்கர வாகனத்தை திருடிய 15 வயது முதல் 17வயதுடைய 4 இளஞ்சிறார்கள் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்ட இளஞ்சிறார்கள், சென்னையில் ராஜமங்கலம், திருமங்கலம், CMBT, அம்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் பல பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. அதன்பேரில், பிடிபட்ட இறஞ்சிறார்களிடமிருந்து புகார்தாரரின் இருசக்கர வாகனம் உட்பட 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் விசாரணையில் பிடிபட்ட ஒரு இளஞ்சிறார் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு ஒன்று இருப்பது தெரியவந்தது. மேற்படி 4 இளஞ்சிறார்களும் விசாரணைக்குப் பின்னர், செவ்வாய்க்கிழமை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE