மோசடி மன்னனை முழுதாய் முடக்க திட்டம்: அமலாக்கத்துறை சாட்சியமாகும் நடிகைகள்

By எஸ்.எஸ்.லெனின்

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைகளில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சுகேஷின் பிரியத்தால் கொழித்திருந்த நடிகையர் இருவர் அமலாக்கத்துறை சாட்சியங்களாக மாற உள்ளனர்.

பெங்களூரு பின்னணியில் பிறந்து வளர்ந்த சுகேஷ் சந்திரசேகர், சென்னையை மையமாக கொண்டே தனது மோசடி லீலைகளை அதிகம் அரங்கேற்றி வந்துள்ளான். பெரிய இடத்து தொடர்புகள், அவர்களுக்கான முறைகேடான இடைத்தரகர் வேலைகள் என சுகேஷுக்கு செல்வாக்கானவர்களின் தொடர்புகள் அதிகம். இந்த பின்னணி காரணமாகவே தன் மீதான வழக்குகளில் இருந்தும் அடிக்கடி நழுவி வந்தான்.

அண்மையில் டெல்லி சிறைக்குள் இருந்தவாறு சுகேஷ் நடத்திய பல நூறு கோடி மோசடி இந்தியாவை அதிர வைத்திருக்கிறது. அப்படி மோசடி செய்த கோடிகளை, பிணையில் வெளிவரும்போதெல்லாம் பாலிவுட் நடிகைகளுக்கு தாராளமாய் செலவு செய்திருக்கிறான். அப்போது அவனுடன் தொடர்பில் இருந்தவர்களில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், நோரா ஃபதேஹி என 2 நடிகையர் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் சிக்கினர்.

ஜாக்குலின் உடன் சுகேஷ்

உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயரையும், அவரது அலுவலத்தின் தொடர்பு எண்களையும் முறைகேடாய் பயன்படுத்தி சுகேஷ் நடத்திய பணமோசடி திருவிளையாடல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அப்படி அவன் சேர்த்த கோடிகளால் பயன்பெற்ற நடிகைகள், சுகேஷின் மோசடிகளில் கூட்டாளியாக்கும் வழக்குகளின் ஆபத்தையும் உணர்ந்தார்கள். தங்கள் மீதும் வழக்கு பாயுமோ என்ற அச்சத்தில், தற்போது சுகேஷுக்கு எதிராக இவர்கள் திரும்பியுள்ளனர். அமலாக்கத்துறை சாட்சியங்களாக மாற இவர்கள் முன்வந்துள்ளனர்.

அந்த வகையில் உறுதியான ஆதாரங்கள் அமலாக்கத்துறையிடம் கிடைக்கும்பட்சத்தில், சுகேஷ் மீண்டும் வெளியில் நடமாடுவதோ, கோடிகளில் மோசடி செய்வதோ இனி முடியாமல் போகும். அமலாக்கத்துறைக்கு அப்பால் சுகேஷை மேலும் முடக்க டெல்லி காவல்துறையும் தனி வழக்குகளின் பட்டியலோடு காத்திருக்கிறது.

இதற்கிடையே வெளியிலிருக்கும் சுகேஷின் நலம் விரும்பிகள் தங்களது அரசியல் மற்றும் அதிகார தொடர்புகளின் மூலமாக சுகேஷுக்கு எதிரான வழக்குகளின் வீரியத்தை குறைக்க முயற்சித்து வருகிறார்கள். இதன் பின்னணியில் சில பிரபலங்களின் கருப்பு முதலீடுகள் சுகேஷ் மூலமாக பதுக்கப்பட்டிருப்பதும், கிரிப்டோகரன்சியாக அவற்றில் பகுதியளவு முடங்கியிருப்பதையும் காரணமாக சொல்கிறார்கள்.

ஆனால், பாலிவுட் நடிகையர் ஜாக்குலின், ஃபதேஹி போன்றோர் சுகேஷுக்கு எதிராக உறுதியாக திரும்பும்பட்சத்தில், இப்போதைக்கு சுகேஷ் சந்திரசேகர் சிறையிலிருந்து விடுபட வாய்ப்பில்லை.

நடிகைகளை பகடையாக்கிய சுகேஷ்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE