ரூ. 21,000 கோடி ஹெராயின் கடத்தல்: சிக்கிய சென்னை தம்பதி

By காமதேனு டீம்

குஜராத் முந்த்ரா துறைமுகத்தில், சுமார் ரூ. 21,000 கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 4 கிலோ மதிப்புள்ள ஹெராயின் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், சென்னையைச் சேர்ந்த மச்சாவரம் சுதாகர் மற்றும் அவரது மனைவி வைசாலிக்கு சொந்தமான நிறுவனத்தின் பெயரில் முகப்பூச்சு பவுடர் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானிலிருந்து, குஜராத் முந்த்ரா துறைமுகம் வழியாகப் போதைப் பொருள் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை போரூர் கொளப்பாக்கத்தில் தங்கியிருந்த சுதாகர், வைசாலியை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

தொடர் விசாரணையில், ஆப்கான் நாட்டவர் உட்பட 8 பேரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், சென்னை தம்பதியை 10 நாள் காவலில் எடுத்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இத்தம்பதிக்கு விஜயவாடாவில் ‘ஆசி டிரேடிங்’ என்ற நிறுவனம் உள்ளது. இதன் பெயரில்தான் 2 கன்டெய்னரில் போதைப்பொருள் கடத்தப்பட்டிருப்பதால், அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மறுபுறம் விஜயவாடா காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை துறைமுகத்திலும் இதேபோன்று கடத்தல் நடைபெற்றுள்ளதா என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 8 வருடங்களாக கொளப்பாக்கத்தில் வசித்து வந்த சுதாகர், வைஷாலி ‘ஆசி சோலார் சிஸ்டம்’ என்ற பெயரில் போலி நிறுவனத்தை ஆரம்பித்ததும் தெரியவந்துள்ளது.

மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னை, விஜயவாடா, டெல்லி, குஜராத் ஆகிய இடங்களுக்குத் தம்பதியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், சுதாகர் 2020 ஆகஸ்ட் மாதம் ஆசி ட்ரேடிங் கம்பெனியைத் தொடங்கியுள்ளார். ஆப்கானிஸ்தான் ‘ஹஸன் ஹுசைன்’ என்ற தனியார் நிறுவனம் மூலம், ஈரான் நாட்டு துறைமுகத்திலிருந்து இந்தியாவில் உள்ள குஜராத் முந்த்ரா துறைமுகத்துக்கு டால்கம் பவுடரை இறக்குமதி செய்வதற்கு அனுமதி பெற்றுள்ளார். பிறகு, இந்தியாவில் அமித் என்ற தரகர் மூலம் ஆப்கானிஸ்தானில் உள்ள ஜாவித் என்ற தரகரை தொடர்பு கொண்டு இந்த இறக்குமதியில் ஈடுபட்டிருக்கிறார் என்பவை விசாரணையில் தெரியவந்துள்ளன.

அவ்வாறு அனுப்பப்பட்ட 2 கன்டெய்னரில்தான் ரூ.21,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்பட்டதை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், இதற்கு முன்னதாக இதே நிறுவனத்தின் பெயரில் கடந்த ஜூன் 9-ல் ஆப்கானிஸ்தானிலிருந்து குஜராத் முந்த்ரா துறைமுகத்துக்கு டால்கம் பவுடர்பெயரில் பொருட்கள் இறக்குமதி ஆகியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் பொருள் சென்னை முகவரிக்குச் சேரும்படி அனுப்பப்பட்டுள்ளதாகவும் துறைமுக ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, சென்னை போலீஸார் உதவியுடன் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக, சென்னைக்கு ஜூன் 9 அன்று ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டவை போதைப்பொருள்தானா என்பது கண்டறியப்பட வேண்டும். குறிப்பாக டெல்லியைச் சேர்ந்த குல்தீப் சிங் பெயரில் இந்த பொருட்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. குல்தீப் சிங் பெயரில் இந்தியாவில் இறக்குமதி செய்யுமாறு, ஆப்கானிஸ்தான் நிறுவனத் தரகர் அமித் கூறியதன் அடிப்படையில் ஆவணங்கள் தயாரித்து இறக்குமதி செய்ததாகவும் சுதாகர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், விஜயவாடா மற்றும் சென்னை காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE