திருப்பூர் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவர் திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ் 2 மாணவியிடம் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு மணிகண்டன் மாணவியை தேனிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதையடுத்து மாணவியை மீட்டு போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீதர் இன்று அளித்த தீர்ப்பில் கூறியது: "மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த மணிகண்டனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற குற்றத்துக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து இதனை ஏக காலத்தில் மணிகண்டன் அனுபவிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார். இதையடுத்து மணிகண்டன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE