திருடனை துரத்திப் பிடித்த ஆயுதப்படை பெண் காவலர்

By காமதேனு டீம்

பேருந்தில், முதியவரிடம் கைப்பேசியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிய திருடனைத் துரத்திச் சென்று பிடித்த பெண் காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சென்னை, பார்க் டவுன் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த முதியவர் தாமோதரன்(70).

இவர், நேற்று திருவான்மியூரில் இருந்து ஏ1 பேருந்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து இறங்கினார். தாமோதரன் பேருந்தில் இருந்து இறங்கும்போது, பேருந்தில் வந்த இளைஞர் ஒருவர் அவரது சட்டை பையிலிருந்த செல்போனைப் பறித்துக்கொண்டு தப்பியோடினார்.

தாமோதரன் ”திருடன்...திருடன்” என்று சத்தம் போட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் செல்போனைப் பறித்துக் கொண்டு ஓடிய நபரைத் துரத்திச் சென்றனர்.

பாலாஜி

அப்போது, அந்த வழியாகப் பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த ஆயுதப்படை பெண் காவலர் இந்திராணி, திருடனை விரட்டி பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பிடிபட்ட நபரிடம் பூக்கடை போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த பாலாஜி (28) என்பதும், அவர் மீது ஏற்கெனவே ஆவடி, சி.எம்.பி.டி. உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

துரிதமாகச் செயல்பட்டு திருடனைப் பிடித்த பெண் காவலரைப் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE