'என்றென்றும் புன்னகை’ 24 வருடங்கள் கழித்து ரீயூனியன்: ஷாலினி அஜித் பகிர்ந்த படம்

By KU BUREAU

24 வருடங்கள் கழித்து மாதவன், ஷாலினி சந்தித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தின் ஹிட் ஜோடி ஷாலினி- மாதவன். இவர்களது சக்தி, கார்த்திக் கதாபாத்திரம் இப்போதும் பலருக்கும் பிடித்தமானது. குழந்தை நட்சத்திரமாக ஷாலினி பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஐந்தே படங்களில் தான் நடித்துள்ளார். அதன் பின்பு, நடிகர் அஜித்தை காதல் திருமணம் செய்தார். ‘அலைபாயுதே’ படத்தில் நடித்தபோதே அஜித்தை காதலித்து வந்தார் ஷாலினி.

இது குறித்து முன்பொரு பேட்டியில் பேசியிருந்த நடிகர் மாதவன், படப்பிடிப்பின் போது ஷாலினி அவரிடம் சொன்ன ஒரு சம்பவத்தை சுவாரஸ்யமாகப் பகிர்ந்திருந்தார். அதாவது, அஜித்தை ஷாலினி திருமணம் செய்ய இருப்பதாகவும் அதனால், ’காதல் காட்சிகளில் பார்த்து நடி’ என்று தன்னிடம் கண்டிஷன் போட்டதாகவும் சிரித்துக் கொண்டே சொன்னார். இந்த ஜோடி 24 வருடங்கள் கழித்து மீண்டும் இப்போது சந்தித்திருக்கிறது. ’என்றென்றும் புன்னகை’ என்ற கேப்ஷனோடு ஷாலினி மாதவனுடன் பகிர்ந்திருக்கும் இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE