மாபெரும் அரசியல் சரித்திரம் படைப்போம்: தவெக தலைவர் விஜய்!

By KU BUREAU

தவெக முதல் மாநாடு நாளை நடைபெற இருக்கும் நிலையில் மாநாட்டில் கலந்துக் கொள்ள வரும் தொண்டர்களின் பாதுகாப்பு பற்றி தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று பகிர்ந்திருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தவெக தலைவர் விஜயின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெற இருக்கிறது. இதனை ஒட்டி வர இருக்கும் தொண்டர்களின் பாதுகாப்பு பற்றி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று பகிர்ந்திருக்கிறார். அதில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம்! பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன்.
அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும். நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE