இதய வாசலைத் திறந்து வைத்து காத்திருப்பேன்: தவெக தலைவர் விஜய் அறிக்கை!

By KU BUREAU

வி.சாலை எனும் வியூக சாலையில் சந்திப்போம் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை மறுதினம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாடு நடைபெற இருப்பதை அடுத்து ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ஜார்ஜ் கோட்டை வடிவிலான முகப்பு இந்த மாநாட்டிற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. மாநாட்டில் 100 அடி உயரத்திலான கம்பத்தில் கட்சியின் கொடியை விஜய் ஏற்ற இருக்கிறார். இந்த கொடி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அந்த இடத்தில் பறக்கும் எனவும் அதை அப்புறப்படுத்தக் கூடாது என்பதற்காக நிலத்திற்கு சொந்தக்காரரான மணி என்பவருடன் ஒப்பந்தமும் போடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், மாநாடு குறித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றி கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப்போகும் தருணம் நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு மிக அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்க போகும் கணங்கள் நம்மிடையே இருக்கும் அன்பின் கணத்தை இன்னும் பல மடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படி செல்வது என்று எனக்கு தெரியவில்லை.

உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கி போற்றும் விதமாக கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கை திருவிழாவை. அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியை கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி. சாலை எல்லையில் என் இரு கரங்களையும் விரித்தபடி இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன். வாருங்கள், மாநாட்டில் கூடுவோம்.

தமிழ்நாட்டு மண்ணுக்காக வெற்றிக் கொள்கைகளை செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்று இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை எனும் வியூகச் சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்’ என அதில் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE