'மஞ்சள் வீரன்’ படத்திற்காக நான் செலவு செய்தேன்: குமுறிய டிடிஎஃப் வாசன்!

By KU BUREAU

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் தன்னை ‘மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து நீக்கியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் நடிக்க இருப்பதாக முன்பு அறிவிப்பு வந்தது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் படத்தின் இயக்குநர் செல்அம் டிடிஎஃப் வாசனை அந்தப் படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அவர் தனக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் அவரது கவனம் வேறு பக்கம் இருக்கிறது என்றும் கூறினார்.

இதுபற்றி டிடிஎஃப் வாசன் தனது யூடியூப் பக்கத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இயக்குநர் செல்அம் மீது முன்வைத்துள்ளார். அதில், “’மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து இயக்குநர் செல்அம் என்னை நீக்கியதே எனக்குத் தெரியாது. இதைப்பற்றியும் அவர் என்னிடம் பேசியதில்லை. நான் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்கிறார். ஆனால், அந்தப் படத்தின் ஃபோட்டோஷூட் மட்டுமே நடந்தது. அதற்கும் படத்தின் பூஜைக்கும் நான்தான் செலவு செய்தேன். அந்தப் பணத்தைக் கூட நான் கேட்க மாட்டேன். ஆனால், என்னிடம் ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

இதுபற்றி பேச அவரை பலமுறை தொலைபேசியில் அழைத்தேன். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. என்னை ஏன் படத்தில் இருந்து நீக்கினார்கள் எனத் தெரிய வேண்டும்” எனப் பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE