நடிகர் ரஜினி சிகிச்சை முன்பே திட்டமிட்டது - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

By KU BUREAU

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி பல்வேறு செய்திகள் வெளியானதை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதுபற்றி விளக்கம் கொடுத்துள்ளார்.

’வேட்டையன்’ படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்தபோதுதான் சிகிச்சைக்காக சென்னை திரும்பினார் ரஜினி. உடல்நலன் தேறியவர் நேற்று காலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு சில நாட்கள் ஓய்வெடுக்க அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ரஜினியின் உடல்நலன் பற்றி பல்வேறு வதந்திகள் பரவியதை அடுத்து இதுபற்றி லோகேஷ் கனகராஜ் சென்னை, விமானநிலையத்தில் நேற்று பேட்டி கொடுத்துள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது, “நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். அவரிடம் பேசினேன். விசாகப்பட்டினத்தில் ‘கூலி’ படப்பிடிப்பு தொடங்கும் முன் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு முன்பே தனக்கு 30ஆம் தேதி மருத்துவ சிகிச்சை இருப்பதாக ரஜினிகாந்த் எங்களிடம் கூறினார். படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தவிர பிற பெரிய நடிகர்களும் இருக்கிறார்கள் என்பதால் இந்த சிகிச்சை பற்றி முன்கூட்டியே சொன்னார். இதனால் 28ஆம் தேதிக்குள் ரஜினி நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டு, 29ஆம் தேதி சென்னை திரும்பினார். அதன் பின்னர்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், இந்த செய்தி பதட்டமாகும் அளவிற்கு எப்படி வைரலானது என தெரியவில்லை.

’கூலி’ படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டது. ரஜினியின் உடல்நிலையை மீறி படம் பெரிது கிடையாது. அவரது உடல் நலம் தான் முக்கியம். அவருக்கு பாதிப்பு ஏதாவது ஏற்பட்டு இருந்தால் படக்குழு முழுவதும் மருத்துவமனையில் தான் நின்று இருக்கும். 5 மணி வரை படப்பிடிப்பு எடுத்து கொண்டு இருக்க மாட்டோம். அவரை பற்றி வந்த செய்திகள் குறிப்பாக யூடியூப் தளங்களில் யார் யாரோ உட்கார்ந்து பேசியதை பார்க்கும்போது வருத்தமாக இருந்தது. ரஜினி தற்போது நன்றாக இருக்கிறார். மருத்துவ சிகிச்சை ஒய்வு தேவைப்படுவதால் ’கூலி’ படத்தில் நடிகர் ரஜினிக்கான போர்ஷன் மீண்டும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் தொடங்கும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE