யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள்: நெப்போலியன் வேண்டுகோள்

By ஸ்டார்க்கர்

யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள் என்று நடிகர் நெப்போலியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நடிகர், அரசியல்வாதி என பலமுகங்களைக் கொண்டவர் நெப்போலியன். இவருடைய மகன் தனுஷ் தசை நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அமெரிக்காவில் குடியேறிவிட்டார். அங்குள்ள காலநிலை மகனுக்கு சரியாக இருக்கும் என்பதே இதற்கு காரணம். அமெரிக்காவில் ஐடி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இதனிடையே, மகன் தனுஷுக்கும் அக்‌ஷயா என்ற பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இது இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இருவருடைய திருமணம் நவம்பர் 7-ம் தேதி ஜப்பானில் நடைபெறவுள்ளது. ஜப்பானில் திருமணம் நடத்த இருப்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது.

இது தொடர்பாக ஜப்பானில் மகனின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வரும் நெப்போலியன் கூறியிருப்பதாவது: “அன்பு நண்பர்களே, உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்களே, எங்கள் மூத்த மகன் தனுஷின் 8 ஆண்டுகால கனவு..! இந்தியாவில் பிறந்தாலும், சூழ்நிலை காரணமாக உலகின் ஒரு கோடியில் இருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் நாங்கள், மறு கோடியில் இருக்கும் ஜப்பானுக்கு பயணம் செய்ய ஓர் ஆண்டு திட்டமிட்டு, 6 மாத காலமாக செயல் வடிவம் கொடுத்து, ஒரு மாத காலமாக பயணம் செய்து, உங்கள் அனைவரது வாழ்த்துக்களாலும் ஆசீர்வாதத்தாலும், தனுஷின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறோம்…! எல்லையில்லா மகிழ்ச்சி அவனுக்கு…! அளவில்லா மனநிறைவு எங்களுக்கு..! சாதித்து விட்டான். இந்த தருணத்தில் ஒரு சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..! அதுபோல எங்கள் வாழ்க்கையை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்..!

நம் பெற்றோரின் கனவுகளுக்காகவும், நமது கனவுகளுக்காகவும், நம் பிள்ளைகளின் கனவுகளுக்காகவும் அவசியம் வாழ வேண்டும்..! வாழ்ந்து பார்க்க வேண்டும்..! கடமையை நிறைவேற்ற வேண்டும்..! வாழ்க்கை ஒருமுறைதான்..! வாழ்ந்துதான் பார்ப்போமே..!

“அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது..!” இந்த உலகிற்கு நாம் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை..! அதுபோல் நாம் இந்த உலகை விட்டு போகும் போதும் எதையும் கொண்டு போகப் போவதில்லை..!

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”, “தீதும் நன்றும் பிறர்தர வாரா”, “அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்”, அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்..! அவரவர் வாழ்க்கையை அவர்களது மனம்போல் நன்றாக வாழுங்கள்..! மற்றவரையும் அவர்களது மனம் போல வாழ விடுங்கள்..! யார் மனதையும் புண்படுத்தாதீர்கள். குறை கூறாதீர்கள், பழிக்காதீர்கள், உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் , யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள்..! உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை மறவாதீர்கள்..!

“ஒரு பக்க சொல் ஓர் யானை பலம்” எல்லோரையும் வாழ்த்துக்கள்..! பிடிக்கவில்லை என்றால் இழிவாக பேசாதீர்கள்..! அது உங்களுக்கே ஒருநாள் திரும்பவிடும்..! எண்ணம் போல்தான் வாழ்க்கை..! நன்றாக எண்ணுங்கள்..! சிந்தனையை செயல்படுத்துங்கள்..! உலகை நீங்களும் வெல்லலாம்..! முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை..!

வாழுங்கள் …! வாழவிடுங்கள்..! நான் போடுகின்ற ஒவ்வொரு பதிவும், எனது திரையுலகின் நடிப்பையும் நிஜ உலகின் வாழ்க்கையையும் பார்த்து ரசிப்பவர்களுக்கும், எங்களை நேசிப்பவர்களுக்கும், எங்களிடம் அன்பை சுவாசிப்பவர்களுக்கு மட்டும்தான்..! அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் பல..!” இவ்வாறு நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE