‘எஸ்டிஆர் 48’ படத்தின் கதை தெரியும் - அப்டேட் சொன்ன விஜே ரக்‌ஷன்!

By KU BUREAU

சென்னை: ‘வேட்டையன்’ படத்தில் நடித்த அனுபவம் மற்றும் ‘எஸ்.டி.ஆர். 48’ பற்றி பேசியிருக்கிறார் நடிகர் விஜே ரக்‌ஷன்.

‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. அடுத்த மாதம் இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில், படம் குறித்தான அனுபவங்களை ‘இந்து தமிழ் திசை’ யூடியூப் நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் விஜே ரக்‌ஷன். அவர் பேசியிருப்பதாவது, “ஞானவேல் சார் படத்தில் நடிக்க இருக்கிறேன் என்பதுதான் முதலில் தெரியும். அதன் பிறகுதான் ரஜினி சார் படத்தில் நான் இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். அந்த விஷயம் தெரிந்ததுமே எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. ஆனால், செட்டில் போய் ரஜினி சாரிடம் பேசியதும் அந்த காய்ச்சல் போனதே தெரியவில்லை.

அந்த அளவிற்கு எங்களிடம் இயல்பாக பழகினார். என்னிடம், ‘எப்போதும் இப்படிதான் ஜாலியா இருப்பீங்களா?’ என்று கேட்டார். ஒரு நாள் அவரிடம் போய் ‘ஐ லவ் யூ’ சொல்லிவிட்டு ஓடிவிட்டேன். இந்தப் படத்திற்காக நான் ஹீரோவாக நடிக்க இருந்த படத்தின் அட்வான்ஸ் கூட திருப்பி கொடுத்துவிட்டேன்” என்றார்.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘எஸ்.டி.ஆர். 48’ படம் குறித்து அவரிடம் கேட்டோம். “உங்களைப் போலதான் அந்தப் படத்திற்கு நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அது பெரிய படம் என்பதால் திரைக்கதைக்கும் படமாக எடுக்கவும் நிறைய நாட்கள் தேவைப்படுகிறது. அந்தப் படத்தின் முழு கதையும் எனக்குத் தெரியும். அதில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். எந்த காட்சியில் எங்கு நான் வரவேண்டும் என்பது முதற்கொண்டு நானும் தேசிங்கும் பேசியிருக்கிறோம். விரைவில் படம் நடக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE