நல்ல கதையுடன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் அதைத் தவற விட மாட்டேன் என நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார்.
தமிழில் 'காதல் கொண்டேன்' படத்தில் அறிமுகமாகி கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் சோனியா அகர்வால். இவர் செல்வராகவனை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2006ம் ஆண்ட திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் இவர்களுடைய வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2012 ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்கு பிறகு இருவரும் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
செல்வராகவன் படம் இயக்கி வரும் நிலையில், சோனியா அகர்வால் தற்போது ஆனந்த் பால்கி இயக்கத்தில் இசையமைப்பாளர் தரண்குமாருடன் இணைந்து 'பேய் காதல்' பாடல் ஆல்பத்தில் நடித்திருக்கிறார். பட வாய்ப்புகள் குறைந்து போனதால்தான் பாடல் ஆல்பங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் அது குறித்து மறுப்பு தெரிவித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
"எனக்கு படங்கள் குறையவில்லை. மலையாளத்தில் பிஹைண்ட் படத்தில் நடித்துள்ளேன். தமிழில் இரண்டு படங்களில் நடிக்கிறேன். தெலுங்கிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. நான் நடித்த 7ஜி ரெயின்போ காலனி படத்தை மீண்டும் ரிலீஸ் செய்தால் மகிழ்ச்சி அடைவேன். அதேபோல நல்ல கதையுடன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் அதனை தவற விடாமல் நடிப்பேன்'' என்று சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார்.