பிரபாஸ் பற்றி நான் சொன்னது என்ன? - இந்தி நடிகர் விளக்கம்

By KU BUREAU

பிரபல இந்தி நடிகர் அர்ஷத் வார்சி. இவர் , காபூல் எக்ஸ்பிரஸ், ஹல்லாபோல், கோல்மால் ரிட்டன்ஸ், பச்சன் பாண்டே என பல படங்களில் நடித்துள்ளார். பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ படம் குறித்துஇவர் விமர்சித்திருந்தார். இதில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், மிருணாள் தாக்குர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

அவர் கூறும்போது, “இந்தப் படத்தில் பிரபாஸ், ஜோக்கர் போல இருந்தார். நான் ‘மேட் மேக்ஸ்’ போன்ற படத்தை, மெல் கிப்ஸன் படத்தைப் பார்க்க விரும்பினேன். ஆனால் என்ன படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை” என விமர்சித்திருந்தார்.

அர்ஷத் வார்சியின் இந்த கருத்து, இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தெலுங்கு திரையுலகினரும் ரசிகர்களும் அர்ஷத் வார்சியை கடுமையாக விமர்சித்தனர். இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த அர்ஷத் வார்சியிடம் அபுதாபியில் நடந்த விருது விழாவில் இதுபற்றி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை உண்டு. நான் அந்தப் படத்தின் கேரக்டர் பற்றிதான் பேசினேன். நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. பிரபாஸ் சிறந்த நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர், தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஆனால், ஒரு நல்ல நடிகருக்கு, மோசமான கதாபாத்திரத்தைக் கொடுத்தால் பார்வையாளர்களுக்கு அது மனவேதனையை தரும் என்பதைத்தான் சொன்னேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE