பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை | சர்ச்சையைக் கிளப்பிய இயக்குநர் மோகன்.ஜி கைது?!

By KU BUREAU

சென்னையில் இன்று காலை ‘திரெளபதி’ பட இயக்குநர் மோகன்.ஜி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய இயக்குநர் மோகன்.ஜி, தனது படங்களிலும் பொதுவெளியிலும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருவதாக ரசிகர்களிடையே அதிருப்தி நிலவி வந்தது. இந்நிலையில், இன்று காலை சென்னை இயக்குநர் மோகன் ஜி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக திருப்பதி திருமலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு சேர்த்திருப்பதாக செய்திகள் வெளியாகி, பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருந்த மோகன் ஜி, அதன் தொடர்ச்சியாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியின் போது, பழனி பஞ்சாமிர்தத்திலும் கருத்தடை மாத்திரைகள் கலந்து பக்தர்களுக்குக் கொடுப்பதாகத் தான் செவி வழி செய்தியாக கேள்விபட்டதாக பேசி அதிர்ச்சியளித்திருந்தார்.

பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் யாராவது கருத்துத் தெரிவித்து வதந்திகளைப் பரப்பி வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மோகன்.ஜி-யின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் அவர் மீது புகார்கள் வந்துள்ளதால் இதுபற்றி விசாரிக்கவே காசிமேடு பகுதியில் இருந்த இயக்குநர் மோகன்.ஜி-யை காவல்துறையினர் விசாரிக்க அழைத்து சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘சினிமா இயக்குநர், நண்பர் திரௌபதி மோகன் G அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை. திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE