பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய திரைப்படம்!

By KU BUREAU

சென்னை: 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' உள்ளிட்டப் படங்களை இயக்கிய பொன்ராம் தனது அடுத்த திரைப்படத்தை அறிவித்துள்ளார்.

நடிகர்கள் சரத்குமார் மற்றும் நடிகர் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்திற்காக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் இயக்குநர் பொன்ராம் முதல் முறையாக கை கோர்த்துள்ளார். கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த, நகைச்சுவையும் சண்டை காட்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் படமாக பிரம்மாண்டமாக உருவாகிறது எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

புதுமுகம் தார்னிகா நாயகியாக நடிக்கிறார். காளி வெங்கட், முனீஷ்காந்த், கல்கி ராஜா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார், தினேஷ் பொன்னுராஜ் படதொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்திற்கு சரவண அபிராமன் பொறுப்பேற்க, மீனாக்ஷி நாராயணசாமி ஆடைகளை வடிவமைக்கிறார். கவிஞர்கள் சினேகனும், யுகபாரதியும் பாடல்களை எழுதுகின்றனர்.

தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி சுற்றி இருக்கும் கிராமங்களையும், அங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையையும் இப்படம் பேசுகிறது. இப்போது தேனியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இயக்குநர் பொன்ராமுக்கே உரிய நகைச்சுவையும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் இருக்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE