ஜானி மாஸ்டரை விட்டு விலகவும் தயார்: மனைவி அதிரடி!

By KU BUREAU

தன் கணவர் மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை விட்டு விலகவும் தயார் என ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா பேட்டி கொடுத்திருக்கிறார்.

தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக 21 வயது பெண் ஒருவர் பிரபல நடன இயக்குநர் ஜானி மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்தார். ஜானி மாஸ்டரின் நடனக்குழுவில் இருந்த அந்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரிடம் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். மும்பை, சென்னை என வேலைக்கு சென்ற இடங்கள் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள வீட்டிலும் தன்னை பாலியல் ரீதியாக ஜானி மாஸ்டர் துன்புறுத்தியதாக அந்தப் பெண் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் ஜானி மாஸ்டர் நேற்று கைது செய்யப்பட்டார். பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக ஜானி மாஸ்டரின் மனைவி சுமலந்தா (எ) ஆயிஷா ஊடகங்களுக்குக் கொடுத்திருக்கும் பேட்டியில், “புகார் அளித்திருக்கும் அந்தப் பெண் சிறுமியாக இருந்தபோது மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தார். பின்பு, சினிமா வாழ்க்கையை பார்த்து சொகுசாக இருக்க வேண்டும் என இந்தத் துறைக்கு வந்து, என் கணவரிடம் வேலைக்கு சேர்ந்தார். ஹைதராபாத்தில் உள்ள திரைப்பட அசோசியேஷனில் உறுப்பினராக சேரக்கூட பணம் இல்லாமல் இருந்தவருக்கு உதவியது இவர்தான். நடன இயக்குநர் அல்லது கதாநாயகியாக வேண்டும் என்பதுதான் அந்தப் பெண்ணின் விருப்பம். மும்பையில் வன்கொடுமை நடந்ததாக சொல்கிறாரே, அதற்கு என்ன ஆதாரம்? அப்படி என்றால் ஏன் அப்போதே சொல்லவில்லை? அந்தப் பெண் சொன்னபடி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருந்தாலும் ஏன் இவரிடம் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டும்? இவரிடம் பணிபுரிவது அதிர்ஷ்டம் என ஏன் சொல்ல வேண்டும்? பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டால் என் கணவரிடம் இருந்து விலகத் தயார்” என அதிரடியாகக் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE