என் வழி எம்ஜிஆர் வழி: நடிகர் பிரபுதேவா பேச்சு!

By KU BUREAU

இயக்குநர் எஸ்.ஜெ. சினு இயக்கத்தில், நடிகர் பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'பேட்ட ராப்'. சன்னிலியோன், வேதிகா, ரமேஷ் திலக் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நடிகர் பிரபுதேவா பேசுகையில், ''நான் பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்தவன். அதனால் அதிகம் படித்தவர்களை கண்டால் எனக்குள் பயம். இதனால் பாடலாசிரியர்களை கண்டால் எனக்குள் ஒரு பிரமிப்பு இருக்கும். இருந்தாலும் பாடலாசிரியர் விவேகா போன்றவர்களிடம் பேசி, பாடல்களில் ஏதாவது திருத்தம் மேற்கொள்வதுண்டு. அவை அனைத்தும் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் தான் அவர்களும் அதனை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு திருத்தி தருவார்கள்.

நான் எப்போதும் எம்ஜிஆர் பார்முலாவை பின்பற்றுபவன். அதனால் சில சொற்களை தவிர்க்குமாறு அறிவுறுத்துவேன். பாலிவுட் நடிகர் சல்மான்கான் 'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களைப் பார்த்து விட்டு அதனை இயக்கிய இயக்குநர் பேரரசுவை பற்றி என்னிடம் பலமுறை வியந்து பாராட்டியிருக்கிறார். ’அந்தத் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யலாமா’ என என்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பார். அதனால் 'பேட்ட ராப் ' படத்திற்கு வாழ்த்த வருகை தந்த இயக்குநர் பேரரசுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகை வேதிகா கடும் உழைப்பாளி. ஒவ்வொரு காட்சிக்கும் தன்னை நன்கு தயார்படுத்திக் கொண்டு வருவார். திறமையான நடிகை. இல்லையென்றால் இயக்குநர் பாலா படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்குமா? அவருடைய கடும் உழைப்பை இந்தப் படத்தில் நேரில் கண்டு வியந்து இருக்கிறேன். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சன்னி லியோன் நடிகை என்பதைக் கடந்து அனைவரையும் நேசிப்பவர். மதிப்பவர். அவர் தன்னுடைய அறக்கட்டளைகள் மூலம் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE