ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு தன்னிச்சையானது: மனைவி ஆர்த்தி கருத்து

By KU BUREAU

நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகள் ஆர்த்தியை காதலித்து கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியாயின.

அதை உறுதிப்படுத்தும் விதமாகத் தனது மனைவியை பிரிவதாக இரு தினங்களுக்கு முன் ஜெயம் ரவி அறிவித்தார். பின்னர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது என் கவனத்துக்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று. பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் அவருடன் நான் வாழ்ந்த வாழ்க்கை, இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கவுரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக உணர்கிறேன்.

என் கணவரிடம் மனம் விட்டுப் பேச,அவரை சந்திக்க வேண்டும் என நான்பலவித முயற்சிகள் செய்தேன். அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் குழந்தைகளும் எதுவும்புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். திருமணப் பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்ததே தவிர, குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்டதல்ல.

ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இதுகுறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

ஒரு தாயாக எனக்கு எப்போதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் அதை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது.

தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் வழங்குவதே என் தலையாய கடமை. காலம், நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE