‘வேட்டையன்’ ரிலீஸுக்கு ரெடி.. அப்டேட் கொடுத்த லைக்கா!

By KU BUREAU

ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸூக்கு தயாராகி வரும் நிலையில், செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் பாடல் வெளியிடப்படுவதாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

‘வேட்டையன்’ பணிகள் முடிவடையாத காரணத்தில் பட வெளியீட்டில் மாற்றம் இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. ‘வேட்டையன்’ ரிலீஸ் தள்ளிப் போவதால் அதே தேதியில் ‘கங்குவா’ வெளியாக கூடிய சூழல் உருவானதாக தகவல் பரவிய நிலையில், இந்த வதந்திகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக, புதிய போஸ்டர் ஒன்றினை ‘வேட்டையன்’ படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியீடு என குறிப்பிட்டு வதந்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும், அனிருத் இசையமைப்பில் ‘மனசிலாயோ’ என்ற முதல் பாடல் செப்டம்பர் 9ம் தேதி வெளியாகும் எனவும் ‘வேட்டையன்’ படக்குழு தெரிவித்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE