அரசு மருத்துவமனையில் தன்னார்வலர்களுக்கு தடை: சூரியின் அம்மன் உணவகம் தலையீடு!

By KU BUREAU

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உணவு வழங்கும் தன்னார்வலர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் நடிகர் சூரியின் அம்மன் உணவகம் தலையீடு உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

மதுரையில் நட்சத்திர நண்பர்கள் என்னும் அமைப்பை சேர்ந்தவர்கள் பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நட்சத்திர நண்பர்கள் அமைப்பு சார்பில் இன்று வரை 200 நாட்களுக்கு மதிய உணவு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அண்மையில் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மாநகர காவல் ஆணையர், உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் மருத்துவமனைக்கு வருகை தர பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை விதித்தனர். இந்நிலையில் இன்று வழக்கம் போல நட்சத்திர நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் மருத்துவமனை வளாகத்திற்கு நோயாளி மற்றும் நோயாளிகளுடன் வந்தவர்களுக்கு உணவு வழங்க வந்தனர்.

அப்போது, மருத்துவமனை பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து புதிய விதிமுறைகளை எடுத்துரைத்து வெளியேற்றியுள்ளனர். இதனால் மருத்துவமனையில் உணவை எதிர்பார்த்து காத்திருந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதோடு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நடிகர் சூரியின் அம்மன் உணவகம் உள்ளது. அதன் ஊழியர்கள் தங்களது வியாபாரம் பாதிப்படைவதாக கூறி அவர்களை வெளியே அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் கூறுகையில். “எங்களை போன்ற வறுமையில் உள்ள குடும்பத்தினர் சிகிச்சை பெற அரசு மருத்துவமனையை நம்பி தான் வருகிறோம். ஆனால் இங்கு விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இது போன்ற சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் மருத்துவமனைக்கு வருகை தந்து கொடுக்கும் உணவுகளை நம்பி தான் எங்களை போன்ற மனிதர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி இங்குள்ள நடிகர் சூரியின் அம்மன் உணவகம் பாதிப்படையும் என்பதால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காமல் விரட்டுகிறார்கள். மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு எங்களுக்கு உணவு வழங்கும் நபர்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE