நடிகர் விமல் ரூ. 3 கோடி கடனை 18% வட்டியுடன் திருப்பி செலுத்த நீதிமன்றம் உத்தரவு!

By KU BUREAU

நடிகர் விமல் ரூ.3 கோடி கடனை 18 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான ‘மன்னர் வகையறா’ திரைப்படத்திற்கு அரசு பிலிம்ஸ் கோபி என்பவர் ரூ.5 கோடி கடனாக கொடுத்திருந்தார். படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறிய விமல் சொன்னபடி கோபியிடம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் 2020 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விமல் மீது
காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார் கோபி.

அதன் பின்னர், சிங்காரவேலன், கோபி ஆகியோர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்திருந்தார் நடிகர் விமல். விமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த விசாரணயின் முடிவில் விமல் மற்றும் கோபிக்கு இடையே சமரசம் ஒப்பந்தம் ஏற்பட்டு, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 3 கோடி பணத்தை ஓராண்டு காலத்திற்குள் திருப்பித் தருவதாக நடிகர் விமல் சமாதான ஒப்பந்தம் செய்து கொடுத்தார். ஓராண்டு கடந்தும் பணம் தராததால் 2022-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கோபி.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோபியிடம் உள்ள ஆவணங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ரூ. 3 கோடியை 18% வட்டியுடன் நடிகர் விமல் திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE