கேப்டன் கூல்: இயக்குநர் வெங்கட்பிரபுவை பாராட்டிய நடிகர் விஜய்!

By KU BUREAU

சென்னை: படப்பிடிப்பில் வெங்கட்பிரபு கோபமே படாமல் அமைதியாக இருந்ததை குறிப்பிட்டு நடிகர் விஜய் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர்கள் விஜய், சிநேகா, லைலா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் 'GOAT' திரைப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், விஜய் மனது வைத்தால் மட்டுமே அது நடக்கும் என்றார் வெங்கட்பிரபு.

விஜய் தற்போது தவெக மாநாட்டு பணியில் பிஸியாக இருப்பதால் 'GOAT' படத்தின் இசை வெளியீட்டு விழா நடப்பது சந்தேகம்தான் என்கின்றனர் இணையவாசிகள். படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாகத் தொடங்கி இருப்பதால் இந்தப் படத்தில் நடித்திருக்கும் வைபவ் படம் தொடர்பாக பேட்டி ஒன்று சமீபத்தில் கொடுத்திருக்கிறார்.

அதில், “'GOAT' படம் நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது. நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என என்னிடம் கூறினார். ’படப்பிடிப்புத் தளத்தில் வெங்கட்பிரபு எப்போதாவது கோபப்படுவார் என எதிர்பார்த்தேன். ஆனால், கடைசி வரை செம கூலாகவே இருந்தார்’ என என்னிடம் பாராட்டினார். விஜய் சாருக்கு பிடித்த மாதிரி நிச்சயம் உங்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும்” எனக் கூறியிருக்கிறார். 'GOAT' படத்தில் விஜய் அப்பா-மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுதவிர மூன்றாவதாக ஒரு விஜயும் படத்தில் இருக்கிறார் என தங்கள் யூகங்களை ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE