ஆம்ஸ்ட்ராங் படுகொலை: இயக்குநர் நெல்சனிடம் போலீஸார் விசாரணை?!

By KU BUREAU

இயக்குநர் நெல்சனிடம் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தியது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இண்று இயக்குநர் நெல்சனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனுக்கு மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும் கிருஷ்ணன் தனது நண்பர் என்ற அடிப்படையிலேயே பேசினோம் என்றும் மோனிஷா விசாரணையில் தெரிவித்திருந்தார். கிருஷ்ணனுக்கு மோனிஷா பணம் எதுவும் வழங்கவில்லை என்று மறுத்திருந்தார்.

இந்நிலையில் சென்னை, அடையாறில் உள்ள இயக்குநர் நெல்சன் இல்லத்திலும் தனிப்படை போலீஸார் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்பட்டது. ஆனால், இந்த செய்தி உண்மை இல்லை என்றும் போலீஸாரிடம் இருந்து எந்தவிதமான சம்மனும் வரவில்லை என்று இயக்குநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE