‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...’ கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய் பேச்சு!

By KU BUREAU

இன்று காலை தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்த தவெக தலைவர் விஜய், கட்சி கொடி குறித்தும், தவெக-வின் முதல் மாநில மாநாடு பற்றியும் பேசினார்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...’ என்ற கட்சியின் உறுதி மொழியை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் வாசித்த பின்னர் கொடியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய். மேலே கீழே சிவப்பு நிறத்திலும் நடுவே மஞ்சள் நிறத்திலும் கொடியின் வண்ணம் அமைந்திருந்தது. கொடியின் நடுவில் வெற்றியை குறிக்கும் வாகை மலரும் அதை சுற்றி நட்சத்திரங்களும் அமைந்திருந்தன. வாகை மலருக்கு இருபுறமும் பிளிறும் போர் யானைகள் இருக்கும்படி வடிவமைத்திருந்தார்கள்.

கொடியை அறிமுகம் செய்து வைத்து பேசிய தவெக தலைவர் விஜய், “இன்று நம் எல்லோருக்குமே சந்தோஷமான நாள். என்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி கடந்த பிப்ரவரி மாதத்தில் கட்சியை அறிவித்தேன். நம் கட்சியின் முதல் மாநில மாநாடு விரைவில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக நீங்கள் எல்லோரும் மகிழ்ந்து கொண்டாட நம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்துள்ளேன். என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் உங்கள் எல்லோர் முன்னிலையிலும் இந்தக் கொடியை அறிமுகம் செய்ததில் பெருமை கொள்கிறேன். இவ்வளவு நாட்கள் நாம் நமக்காக உழைத்தோம். ஆனால், வரும் காலத்தில் நாம் தமிழக மக்களின் வெற்றிக்காக நன்மைக்காக உழைக்க வேண்டும். புயலுக்குப் பின் அமைதி என்பதுபோல நம் கட்சிக் கொடிக்குப் பின்பும் சுவாரஸ்யமான வரலாற்று குறிப்பு ஒன்று உள்ளது.

அதை நம் மாநில கட்சி மாநாட்டில் நம் கொள்கைகளோடு சேர்ந்து சொல்வேன். அது வரை, இந்த நிகழ்வை கெத்தா, சந்தோஷமாக கொண்டாடுவோம். இதை நம் கட்சிக்கான கொடியாக மட்டும் பார்க்கவில்லை. வருங்கால தமிழக தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக இதைப் பார்க்கிறேன். இந்தக் கொடியை உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் நான் சொல்லாமல் ஏற்றுவீர்கள் என எனக்குத் தெரியும். அதற்கான முறையான அனுமதி வாங்கி பின்புசெய்யுங்கள். நம்பிக்கையாக இருங்கள். வெற்றி நிச்சயம்!” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE