கவுண்டமணியுடன் மீண்டும் ஜோடி சேரணும்: நடிகர் செந்தில் விருப்பம்!

By KU BUREAU

சென்னை: நடிகர் கவுண்டமணியுடன் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பு வேண்டும் என்று நடிகர் செந்தில் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

வடசென்னை எண்ணூர் விரைவு சாலை திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலின் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு புஷ்பாஞ்சலி பூஜை நேற்று நடைபெற்றது இதில் நகைச்சுவை நடிகர் செந்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “ஆண்டுதோறும் இந்த கோயிலுக்கு வருவதால் எனக்கும் என் குடும்பத்திற்கும் நல்ல பலன்கள் கிடைத்து வருகிறது. இதேபோல, பொதுமக்களும் வந்து அம்மன் அருளை பெற வேண்டும்” என்றும் கூறினார். நடிகர் விஜய் தவெக கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு, அந்தக் கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என்று நழுவினார் செந்தில்.

தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படும் ஜோடிகளில் கவுண்டமணி- செந்திலும் ஒன்று. பல படங்களில் இவர்கள் இணைந்து நகைச்சுவை பட்டாசு கொளுத்தியிருக்கிறார்கள். இப்போது கவுண்டமணி கதாநாயகனாக ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை ஒட்டி, மீண்டும் கவுண்டமணியுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு உண்டா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அந்த வாய்ப்பு கிடைத்தால் விட்டு விடுவேனா? வேண்டாம் என சொல்வேனா? நிச்சயம் அப்படியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்” எனத் தனது விருப்பத்தை தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE