நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் - படப்பிடிப்பில் விபரீதம்

By KU BUREAU

சென்னை: நடிகர் சூர்யாவுக்கு படப்பிடிப்பில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனது 44ஆவது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதன் போஸ்டரும், கிளிம்ப்ஸ் வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் அந்தமானில் நடந்தது. இதில், ஆக்‌ஷன் காட்சிகளும் சூர்யா-பூஜா தொடர்பான காட்சிகளும் படமாக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. கிட்டத்தட்ட ஒரு மாத கால அளவில் அந்தமான் ஷெட்யூலை முடித்த படக்குழு இப்போது ஊட்டியில் அடுத்த ஷெட்யூலை தொடங்கி இருக்கிறது.

இங்குதான் நடிகர் சூர்யாவுக்கு தலையில் எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டிருக்கிறது. ஆக்‌ஷன் காட்சியின் போது எதிரே இருந்தவர் அவரது தலையில் தவறுதலாக தாக்கியதில் இந்த காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் சூர்யாவின் தலையில் இரத்தம் வடிய படக்குழுவினர் பதறிப் போய் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். சிறிய காயம் என்பதால் சில நாட்கள் சூர்யாவை ஓய்வெடுக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறார். இப்போது சூர்யா நலமுடன் இருப்பதாகவும் அவரது வட்டாரம் தெரிவிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE