பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன்; நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு!

By KU BUREAU

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்து இருக்கிறார்.

உலகப் புகழ்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழிலும் கால்பதித்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஏழு சீசன்களை இதுவரை கடந்துள்ளது. இதில் ஒரு சீசன் ஓடிடியிலும் 24*7 என ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது. ஐந்து சீசன்கள் வரைக்கும் தான் தொகுப்பாளராக கமல்ஹாசனுக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது எனவும் அதன் பிறகு அவர் தொடர மாட்டார் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், அதை எல்லாம் மறுத்து ஆறு மற்றும் ஏழாவது சீசனைத் தொகுத்து வழங்கினார். இடையில் ஒளிபரப்பான ஓடிடி சீசனில் கமல்ஹாசன் ‘விக்ரம்’ படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால், கமலுக்குப் பதிலாக சிம்பு தொகுத்து வழங்கி ரசிகர்களைக் கவர்ந்தார்.

இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனுக்கான வேலைகள் பரபரக்கத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தான் விலகுவதாக கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘முன்பே ஒப்பந்தமான சினிமா பணிகள் காரணமாக இனி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் உங்கள் இல்லங்களை வந்தடைந்தேன். நீங்கள் எனக்கு அன்பும் ஆதரவும் கொடுத்தீர்கள். இதுபோலவே போட்டியாளர்களுக்கு நீங்கள் கொடுத்த அன்பும் இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் சிறந்த ரியாலிட்டி நிகழ்ச்சியாக மாற்றியது.

நிகழ்ச்சி தொகுப்பாளராக நான் கற்றுக் கொண்ட விஷயங்களை உண்மையாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் மேடையாக இது இருந்தது. போட்டியாளர்களுக்கும் விஜய் டிவிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் சீசன் வெற்றியடைய எனது வாழ்த்துகள்!’ எனக் கூறியுள்ளார். கமல்ஹாசன் விலகி இருப்பதால் மீண்டும் சிம்புவே வருவாரா அல்லது அவரது இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக கமல்ஹாசனை தாங்கள் மிஸ் செய்வோம் என்றும் கூறி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE