இயக்குநர் பாலா மீதான வழக்கு - தள்ளுபடி செய்தது சென்னை உரிமையியல் நீதிமன்றம்

By KU BUREAU

சென்னை: இயக்குநர் பாலா மீது, தயாரிப்பாளர் விஏ துரை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா இணைந்து நடித்த ‘பிதாமகன்’ திரைப்படம் கடந்த 2003ல் வெளியானது. இந்தப் படத்தை எவர்கிரீன் நிறுவனம் சார்பில் வி ஏ துரை தயாரித்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததுடன், நடிகர் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. ஆனால் இந்த படம் தயாரித்ததில் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, இயக்குநர் பாலா தனக்கு 25 லட்ச ரூபாய் தர வேண்டும் என நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் விஏ துரை பல வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்து இருந்தார்.

தயாரிப்பாளர் விஏ துரை கடந்த வருடம் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். கடந்த வருடம் முதல் இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்து வேகமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தயாரிப்பாளர் விஏ துரை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை தயாரிப்பாளர் விஏ துரை தொடுப்பதற்கு முன்பே பல சமயங்களில் இயக்குநர் பாலா அவருக்கு நிறைய உதவிகளை செய்துள்ளார் எனவும், அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் அவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் எனவும் பாலா தரப்பு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்ல தற்போது இயக்குநர் பாலா, நடிகர் அருண்விஜய் நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்கி வரும் ‘வணங்கான்’ படத்திற்கு, அந்த தலைப்பை பயன்படுத்தக் கூடாது என எஸ்.சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கில் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து பாலாவிற்கு ’வணங்கான்’ தலைப்பை பயன்படுத்திக் கொள்ள தடை இல்லை என அனுமதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு இயக்குநர் பாலா தரப்பு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE