‘வாழை’ என் வாழ்க்கை கதை: மாரி செல்வராஜ் தகவல்

By KU BUREAU

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம், ‘வாழை’. திவ்யா மாரி செல்வராஜ் தயாரிக்கும் இந்தப் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வழங்குகிறது. குழந்தை நட்சத்திரங்களுடன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். யுகபாரதி, வெயில் முத்து பாடல்கள் எழுதியுள்ளனர். இ்தன் முதல் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, “இதில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் எல்லோருமே அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார்கள். இது என் வாழ்க்கை கதை. நான் பட்ட கஷ்டத்தை அவர்கள் பட வேண்டும் என்று முதலிலேயே சொல்லிவிட்டேன். நான் என்ன கஷ்டப் பட்டேனோ, அதை நீங்கள் இந்தப் படத்தில் பட்டால் தான், அந்தவலி தெரியும் என்று சொல்லித்தான் நடிக்க வைத்தேன். அட்டகாசமாக நடித்துள்ளார்கள்.

தயாரிப்பாளராக என் மனைவி திவ்யா பெயரும் இந்தப் படைப்பில் இருப்பது மிகப்பெரிய சந்தோஷம். என்னை, என் அரசியலைப் புரிந்து கொள்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட திரைப்படம் ‘வாழை’. இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது, உங்களுக்கு என்னைப்பற்றி முழுதாக புரியும்” என்றார்.

இயக்குநர் ராம், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE