நடிகர் விஜயின் தவெக நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு!

By KU BUREAU

புதுச்சேரி: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய், இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை துவக்கினார். இக்கட்சிக்கு பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டார். புஸ்ஸி ஆனந்தின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் இவருக்கு வாழ்த்துக் கூறி தமிழகம் முழுவதும் உள்ள தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பேனர்கள் வைத்தனர்.

இதேபோல புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்த் வீட்டின் அருகாமையில் உள்ள காந்தி வீதி மற்றும் புஸ்ஸி வீதி உட்பட நகரின் முக்கிய பகுதிகள் முழுவதிலும் தவெகவினர் பேனர் மற்றும் கட் அவுட் வைத்திருந்தனர். இந்நிலையில், புதுச்சேரியில் பேனர் கட்டவுட் வைப்பதற்கு தடை சட்டம் அமலில் உள்ளது.

அதனை அரசு தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தி வரும் சூழலில், நேற்றைய தினம் புஸ்ஸி பகுதியில் பேனர்கள் மற்றும் கட்டவுட் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி துணை மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தார். இதன் பேரில் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் தற்போது பேனர் வைத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE