நடிகர் சூர்யா இடத்தை தட்டித் தூக்கிய சிவகார்த்திகேயன்? - ‘புறநானூறு’ அப்டேட்!

By KU BUREAU

சென்னை: ’புறநானூறு’ படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியதை அடுத்து அவருக்குப் பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்கிறாராம்.

’சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குநர் சுதா கொங்கராவுடன் ஒரு படம் நடிப்பேன் என முன்பு அறிவித்திருந்தார் நடிகர் சூர்யா. அந்தப் படம்தான் ‘புறநானூறு’. ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாக இருந்த இந்தப் படத்தின் அறிமுக டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. போராட்டக்காரர்களுக்கும் போலீஸூக்கும் இடையேயான பிரச்சினையை மையமாகக் கொண்டு இந்தப் படத்தை சுதா கொங்கரா உருவாக்க இருந்ததாகத் தகவல் வெளியானது.

இதில் சூர்யாவுடன் அதிதி ஷங்கர், விஜய் வர்மா, துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டப் பலர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், சூர்யா இந்தக் கதையில் சில மாற்றங்கள் சொன்னதாகவும் அதை சுதா கொங்கரா ஒப்புக் கொள்ளாததால், அந்தக் கதையில் இருந்து சூர்யா விலகுவதாகவும் சொல்லப்பட்டது.

இதுபற்றி, படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருந்தாலும், சூர்யாவுக்குப் பதிலாக சிவகார்த்திகேயன் இந்தக் கதையில் நடிக்க இருக்கிறார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைத் தயாரிப்பதாக இருந்த சூர்யாவின் 2டி நிறுவனமும் படத்தில் இருந்து விலகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘அமரன்’ படத்தை முடித்துவிட்டு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23ஆவது படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறாரா அல்லது மீண்டும் ‘டான்’ இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கிறாரா என்பது விரைவில் தெரிய வரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE