விவாகரத்து பதிவை லைக் செய்த அபிஷேக் பச்சன்: மீண்டும் வெடித்த சர்ச்சை!

By KU BUREAU

விவாகரத்து குறித்தான பதிவு ஒன்றை அபிஷேக் பச்சன் சமூக வலைதளங்களில் லைக் செய்திருப்பது பாலிவுட்டில் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பாலிவுட்டின் நட்சத்திர தம்பதி ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சனைச் சுற்றி விவாகரத்து சர்ச்சை கிளம்பி இருக்கிறது. ஆனால், இது பற்றி ஐஸ்வர்யா ராயோ, அமிதாப் குடும்பத்தினரோ வாய் திறக்காமல் மெளனம் காத்து வருகின்றனர். சமீபத்தில் மும்பையில் நடந்து முடிந்த தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் தனியாக கலந்து கொண்டதும், அபிஷேக் பச்சன், அமிதாப் என அவர்கள் தனியாக வந்திருந்ததும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் இவர்களது விவாகரத்து செய்திகள் குறித்து விவாதத்தைக் கிளப்பியது.

இந்நிலையில், விவாகரத்து பற்றிய பதிவு ஒன்றை சமூகவலைதளங்களில் லைக் செய்திருக்கிறார் அபிஷேக். அந்தப் பதிவில், ‘காதலிப்பவர்களுடன் கடைசி வரை இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் தான் இருக்கும். ஆனால், அது எல்லோருக்கும் நடக்கும் என்று சொல்லிவிட முடியாது. பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து விட்டு பிரியும் போது வலி இருக்கதான் செய்யும்’ என்ற ரீதியில் இருக்கிறது. இந்த பதிவை லைக் செய்து மீண்டும் விவாகரத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் அபிஷேக்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE