கார்த்தி படப்பிடிப்பில் விபத்து: ஸ்டண்ட் கலைஞர் மரணம்!

By KU BUREAU

சென்னையில் நடைபெற்று வரும் நடிகர் கார்த்தியின் சர்தார்-2 படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருந்த சண்டை பயிற்சியாளர் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து கடந்த 2022ம் ஆண்டு வெளியான சர்தார் திரைப்படம், ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரிப்பில் இருந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இன்று சண்டைக்காட்சி ஒன்றிற்கான பயிற்சியில் சண்டை பயிற்சியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 20 அடி உயரத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் நடித்து வந்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக திடீரென அவர் 20 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் மார்பு பகுதியில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி உள்ளார்.

உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு படக்குழுவினர் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE