தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை - ‘நோ கமெண்ட்ஸ்’ நழுவிய ரஜினிகாந்த்!

By KU BUREAU

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க மறுத்துள்ளார்.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னை திரும்பினார். ’வேட்டையன்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார், இந்த நிலையில் அடுத்த கட்டப்படபிடிப்பிற்காக கடந்த நான்காம் தேதி ரஜினிகாந்த் சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டார்.

இதையடுத்து மும்பையில் நடைபெற்ற ஆனந்த அம்பானி ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமண நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மும்பையில் இருந்து விமான மூலம் நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “அம்பானி வீட்டின் கடைசி கல்யாணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது அதில் கலந்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. நாளை கமல் நடித்துள்ள ’இந்தியன் 2’ திரைப்படத்தை பார்க்க உள்ளேன்” என்றார். தமிழகத்தில் நடைபெற்ற என்கவுண்டர் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து கேட்டபோது ”நோ கமெண்ட்ஸ்” எனக் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE