மிருதங்க மேதையாக மிளிர்ந்த சிவாஜி!

By வி. ராம்ஜி

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு முறையும் புதிதாகப் பிறந்தவர் சிவாஜி கணேசன். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, படப்பிடிப்பில், கேமராவுக்கு எதிரே நிற்கும்போது அப்போது புதிதாகவே பிறந்திருப்பார். அப்படித்தான் டாக்டராக மாறுவார். ஜமீனாக மாறுவார். விஞ்ஞானியாக மாறுவார், பெருநோய் வந்தவராக, பிரஸ்டீஜ் பத்மநாபனாக, மாதா கோயில் ஆன்டனியாக, கை ரிக்‌ஷா இழுப்பவராக, போலீஸ் அதிகாரியாக, பாரீஸ்டர் ரஜினிகாந்தாக... என்று உருமாற்றங்களைச் செய்துகொண்டே இருப்பார்.

1952-ம் ஆண்டில் இருந்து நடித்துவந்த சிவாஜி கணேசன், 30 ஆண்டுகள் கழித்தும் திரைத் துறையில் இயங்கிக்கொண்டே இருந்தார். எண்பதுகளில், கமலும் ரஜினியும் எம்ஜிஆர் - சிவாஜி இடங்களைப் பிடித்துவிட்டிருந்தார்கள். அடுத்து, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, மோகன் என பலரும் வந்திருந்தனர். ஆனாலும் சிவாஜி தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருந்தார். எண்பதுகளில், போலீஸ் அதிகாரியாகவும் பாதிரியாராகவும் இரண்டு வேடங்களில் நடித்த ‘வெள்ளை ரோஜா’ படம் வந்தது. பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’யில் மனிதாபிமானம் மிக்க கிராமத்துப் பெருந்தலையாக நடித்தார். பாக்யராஜின் ‘தாவணிக்கனவுகள்’ படத்தில், ஓய்வுபெற்ற மிலிட்டரிக்காரராக நடித்தார். இன்னும் பல படங்கள் வந்தன. சில படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. படம் எப்படி இருந்தாலும் சிவாஜி, தன் முத்திரையைக் காட்டத் தவறியதே இல்லை.

1983-ல் கலைஞானம் தயாரிப்பில், கே.சங்கர் இயக்கத்தில், ‘மிருதங்க சக்கரவர்த்தி’ திரைப்படம் வெளியானது. மிருதங்க வித்வானாக சிவாஜி நடித்தார் என்பதைத் தலைப்பே சொல்லிவிடும். சிவாஜி - பத்மினி ஜோடிக்குப் பின்னர், சிவாஜிக்குப் பொருத்தமான ஜோடி என்று சிவாஜி - கே.ஆர்.விஜயா ஜோடியைச் சொல்லுவார்கள். இருவரும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தார்கள். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களில் ‘மிருதங்க சக்கரவர்த்தி’யும் முக்கியமான படம்.

கலைஞானம் தெரியும்தானே. ரஜினிக்கு அட்டகாசமான கதாபாத்திரம் கொடுத்து ‘பைரவி’யில் நடிக்க வைத்தார். இந்தப் படத்துக்கான போஸ்டரில்தான் ‘சூப்பர் ஸ்டார்’ என முதன்முதலாக தாணு விளம்பரப்படுத்தினார். தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் பணியாற்றியவர் கலைஞானம். பாக்யராஜ் உட்பட பல இயக்குநரின் கதை விவாதங்களில் கலந்துகொண்டு, பல வெற்றிப்படங்கள் உருவாகக் காரணமானவர்.

மிருதங்க சக்கரவர்த்தி

கலைஞானம் கதை எழுதினார். பனசை மணி திரைக்கதை எழுதினார். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதினார். கே.சங்கர் இயக்கத்தில் வெளியானது ’மிருதங்கச் சக்கரவர்த்தி’. சிவாஜியும் பிரபுவும் இணைந்து நடித்த படங்களில், இதுவும் முக்கியமான படம்தான்!

குமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம்தான் கதைக்களம். படத்தின் பல காட்சிகள், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், கோயிலின் குளம், சுற்றியுள்ள வீடுகள், தெருக்கள் என எடுக்கப்பட்டிருந்தன. இந்த லொகேஷன் தமிழ் சினிமாவுக்குப் புதுசு. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் எல்லாப் பாடல்களும் வெற்றி பெற்றன.

சிவாஜிக்கென்ன சொல்லவா வேண்டும்? வழக்கம் போல், நடிப்பில் ஜொலித்தார். மிருதங்க வித்வான் செய்யும் முகபாவனைகளெல்லாம், கைஜாலங்களெல்லாம் செய்து பிரமிப்பூட்டினார். படத்தின் பாடல்களை வாலியும் புலமைப்பித்தனும் எழுதினார்கள். நம்பியார், வி.கே.ராமசாமி, சுலக்‌ஷணா முதலானோர் நடித்திருந்தார்கள். திருமுருக கிருபானந்த வாரியாரும் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா ஒரு பாடல் பாடியிருந்தார். அதேபோல், சீர்காழி சிவசிதம்பரமும் அற்புதமான பாடலைப் பாடியிருந்தார்.

’ஓங்கார நாதம்’ என்றொரு பாடல். ’அபிநய சுந்தரி’ என்றொரு பாடல். ’இது கேட்கத் திகட்டாத கானம்’ என்கிற பாலமுரளி கிருஷ்ணாவின் பாடல். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது. ‘சுகமான ராகங்களே’ எனும் வாணி ஜெயராமின் பாடல். கேட்கக் கேட்க அத்தனை சுகமாக இருக்கும். வாணி ஜெயராமின் குரலும் ஜாலமும் நமக்குள் தரும் சுகானுபவம் தனிச்சுவை! இப்படி அனைத்துப் பாடல்களும் வெற்றியைப் பெற்றன. அப்போதைய ரசிகர்களால் முணுமுணுக்கப்பட்டன.

தந்தைக்கும் மகனுக்கும் பிணைப்பு பிறகு பிணக்கு என்பதுதான் கதை. புகழின் உச்சியில் இருக்கும் கலைஞன், தடக்கென்று கீழே சரிவதைப் பேசும் கதை. செல்வத்தில் கொழித்த ஒருவர், ஏழ்மை நிலைக்கு வருவதைச் சொல்லும் கதை. இந்த மூன்று விஷயங்களையும் இணைத்து திரைக்கதையாக்கி, உதாசீனப்படுத்திய மகன், தந்தையைப் புரிந்துகொண்டு, தந்தையின் கலை வாரிசு நானே என நிரூபிப்பது என படம் நிறைவுறும். ஆனாலும் ஏதோவொரு சுவை குறைந்திருந்தது. ஆகவே, அப்பா, பிள்ளை பிரிவும் ஜெயிப்பும் பெரிய வருத்தத்தையோ குதூகலத்தையோ ஏற்படுத்திவிடவில்லை.

பிரபல மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், சிவாஜியின் மிருதங்க நடிப்புக்கு வாத்தியம் இசைத்திருந்தார். அதாவது உமையாள் சிவராமனின் மிருதங்க இசைக்கு, சிவாஜி கணேசன் வித்வானாக நடித்திருந்தார்.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் எப்படி, நாகஸ்வர வித்வானாகவே வாழ்ந்தாரோ, அதேபோல், இதிலும் மிருதங்க சக்கரவர்த்தியாகவே அவதாரம் எடுத்திருந்தார் சிவாஜி. மிருதங்கத்தை வைத்துக்கொள்வதும் ஒரு காலை மடக்கி இன்னொரு காலை லேசாகத் தூக்கிக்கொள்வதும் இரண்டு கைகளும் மிருதங்கத்தில் பட்டு விளையாடுவதும் அப்படி வாசிக்கும்போது தலை ஒரு பக்கமாக சாய்ந்திருப்பதும், முகத்தில் ஒவ்வொரு ஜாலம் காட்டுவதும் என சிவாஜி சிறப்பாகவே நடித்திருந்தார்.

அதேபோல, கே.ஆர்.விஜயாவின் பெருமித நடிப்பாகட்டும், பிள்ளை பக்கம் செல்வதா, கணவனுக்கு ஆதரவாக இருப்பதா என்று தவிப்பதாகட்டும், கணவரின் புகழ் மங்கிவிட்டதைக் கண்டு கலங்கித் துடிப்பதாகட்டும்... நடிப்பில் ஜமாய்த்திருந்தார். ஆனாலும் படம் ஏனோ பிரகாசிக்கவில்லை.

இந்தப் படம் குறித்து சொல்லும்போது இதையும் சொல்லியாக வேண்டும். ‘மிருதங்க சக்கரவர்த்தி’ வெளியான போது, வாரப் பத்திரிகை ஒன்று விமர்சனம் எழுதியது. அதில், சிவாஜியின் மிருதங்க நடிப்பை கேலி செய்திருந்தது. இதைப் படித்துவிட்டு, திரையுலகினரும் சிவாஜி ரசிகர்களும் கொந்தளித்துப் போனார்கள்.

விமர்சனம் எழுதியதற்கு வந்த கண்டனத்தை அறிந்த அந்தப் பத்திரிகை, பிரபல மிருதங்க வித்வான்களிடம், ‘மிருதங்க சக்கரவத்தி’யில் சிவாஜி மிருதங்கம் வாசிக்கும் நடிப்பு குறித்துக் பேட்டி எடுத்து பிரசுரித்தது. அந்த வித்வான்கள் அனைவரும் மிகப்பெரிய மேதைகள். அவர்கள் அனைவரும் ‘சிவாஜியின் நடிப்பு அத்தனை தத்ரூபமாக இருந்தது. அவரே மிருதங்கம் வாசித்தால் என்னென்ன பாவங்கள் முகத்தில் ஏற்படுமோ அதை அப்படியே செய்திருந்தார். மிருதங்கக் கலைஞர்களை அப்படியே திரையில் காட்டியிருந்தார்’ என்று பாராட்டியிருந்தார்கள். கிட்டத்தட்ட, தான் கேலி செய்து எழுதிய விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்பது போல் இந்தப் பேட்டிக் கட்டுரை அமைந்திருந்தது.

1983 செப்டம்பர் 24-ம் தேதி வெளியானது ‘மிருதங்க சக்கரவர்த்தி’. படம் வெளியாகி 39 வருடங்களாகின்றன. ’சிவாஜி - கே.ஆ.விஜயா’ ஜோடியையும் பிரபுவையும் ‘அபிநய சுந்தரி ஆடுகின்றாள்’ பாடலையும் மறக்கவில்லை ரசிகர்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE