‘இந்தியன் 2’ படத்துக்கு தடை கோரி வழக்கு: கமல் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராக உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: இந்தியன்-2 படத்துக்கு தடை கோரிய வழக்கில் நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராக மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த ராஜேந்திரன், மதுரை மாவட்ட 4-வது முன்சீப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: மதுரையில் கடந்த 55 ஆண்டுகளாக வர்மக்கலை பயிற்சி அளித்து வருகிறேன். கடந்த 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் சினிமாவுக்காக நடிகர் கமல்ஹாசனுக்கு படப்பிடிப்பு தளத்தில் வர்ம கலைகளை கற்றுக் கொடுத்தேன்.

எழுத்தாளர் சுஜாதா மற்றும் ஷங்கர் ஆகியோர் கதைக்கு தேவையான இடங்களில் வர்மக் கலை சம்பந்தமான சண்டை முறைகளையும், அது தொடர்பான அறிவியல் பூர்வமான விளக்கங்களையும் கேட்டு தெரிந்து கொண்டனர். அவர்களுக்கு வர்மக் கலையை செய்து காட்டினேன். படபிடிப்பின் போது வர்ம சண்டை காட்சிகளை அமைத்து கொடுத்தேன். இதனால் படத்தின் டைட்டில் கார்டில் எனது பெயர் சேர்க்கப்பட்டது.

இந்தியன் படத்தில் வர்மக்கலை சண்டைக் காட்சிகளில் நான் பயன்படுத்திய முத்திரைகள் அனைத்தும், எனது தொடு வர்மம் 96 என்ற புத்தகத்தில் இடம் பெற்ற முத்திரைகளை பயன்படுத்தி காட்சிப்படுத்தினேன். இதற்கு முன்பு வர்ம முத்திரை படங்கள் வேறு எந்த புத்தகத்திலும் வந்தது இல்லை. இந்நிலையில் இந்தியன்-2 படத்தின் போஸ்டர்களில் நான் ஏற்கனவே சொல்லி கொடுத்த முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. என் அனுமதி இல்லாமல் இந்தியன்-2 படத்தில் வர்மக்கலை முத்திரை பயன்படுத்தி உள்ளனர். அதற்கு என்னிடம் அனுமதி பெற வேண்டும்.

என் பெயரை டைட்டில் கார்டில் சேர்க்க வேண்டும் என படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை. எனவே, எனது கோரிக்கை நிறைவேறும் வரை இந்தியன்-2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி செல்வ மகேஸ்வரி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இயக்குநர் சங்கர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டார். நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை.

இதையடுத்து நீதிபதி, நீதியின் நலன் கருதி தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும். தவறினால் இயக்குனர் சங்கர் தரப்பு வழக்கறிஞரின் வாதம் மற்றும் பதில் மனுவை பொறுத்து வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த உத்தரவு நடிகர் மற்றும் தயாரிப்பாளரையும் கட்டுப்படுத்தும். விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE