சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகர்: கண்ணீர் விட்டு அழுத சூர்யா

By கி.பார்த்திபன்

நாமக்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் நடிகர் சூர்யா ரசிகர் மன்ற நாமக்கல் மாவட்டச் செயலாளராக இருந்தார். நாமக்கல்லில் நேற்று நடந்த சாலை விபத்து ஒன்றில் ஜெகதீசன் உயிரிழந்தார். தகவலறிந்த நடிகர் சூர்யா சென்னையில் இருந்து கார் மூலம் நாமக்கல் வந்தார்.

மேட்டுத்தெருவில் உள்ள ஜெகதீசனின் வீட்டுக்குச் சென்ற நடிகர் சூர்யா, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதுடன் கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து ஜெகதீசனின் மனைவி ராதிகாவிற்கு ஆறுதல் கூறிய அவர், குழந்தைகளுக்கான படிப்புச் செலவை ஏற்பதாகவும், குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் உறுதியளித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக நடிகர் சூர்யா வந்ததையறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் மேட்டுத்தெருப் பகுதியில் திரண்டனர. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல் துறையினர் அங்கு வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். போக்குவரத்து சீரடைந்த பின்னர் ஜெகதீசன் வீட்டிற்கு சூர்யா சென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE