பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணையும் யோகிபாபு!

By காமதேனு

அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நடிகர் யோகிபாபு நடிக்கிறார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் கடந்த 2013-ம் ஆண்டு நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்', 2014-ம் ஆண்டு நடித்த 'ஹாப்பி நியூ இயர்', 2015-ம் ஆணடு நடித்த 'தில்வாலே' படங்கள் வெற்றி பெற்றன. இதன் பின் அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் சில காலம் சினிமாவில் இருந்து ஷாரூக்கான் ஒதுங்கியிருந்தாலும் பலரிடம் கதை கேட்டு வந்தார். தமிழில் வெற்றிமாறன், அட்லி ஆகியோர் அவரிடம் கதை சொன்னார்கள். அட்லி தமிழில் 'ராஜாராணி', 'மெர்சல்', 'பிகில்', 'தெறி' படங்களை இயக்கியுள்ளார். விஜய் நடிப்பில் 'பிகில்' படம் தயாரான போதே ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லியிருந்தார். இந்த கதை ஷாருக்கானுக்கு பிடித்துப் போனது. இதையடுத்து படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி, மும்பை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணியும் இப்படத்தில் நடிப்பதாக தெரிகிறது. இந்நிலையில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ட்விட்டரில் ரசிகர் ஒருவர் எழுப்பிய, "ஷாருக்கான் - அட்லி படத்தில் நடிக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு, "ஆம்" என பதில் அளித்தார். இதன் மூலம் அட்லி இயக்கும் ஷாருக்கான் படத்தில் யோகிபாபு நடிப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே ஷாருக்கானின் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE