`என் கதையில் கங்கனாவா? எனக்கு நடிகர்கள்தான் தேவை’

By காமதேனு

’சினிமா, எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்கள் மீடியம்’ என்பதை உறுதியாக நம்புகிறேன்' என்று ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் 1990-ம் ஆண்டுகளில் இந்து பண்டிட்டுகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என மிரட்டப்பட்டனர். இதனால், லட்சக்கணக்கான பண்டிட்கள், வாழ்விடங்களை விட்டு வெளியேறினர்.

அப்போது, காஷ்மீரில் பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், அவர்கள் வெளியேறிய சம்பவங்களை கொண்டு, தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற படம் உருவாகி இருக்கிறது. விவேக் அக்னிகோத்ரி இயக்கியுள்ள இதில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், பல்லவி ஜோஷி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு சில மாநிலங்கள் வரிச்சலுகை அளித்துள்ளன.

விவேக் அக்னிகோத்ரி, கங்கனா ரனாவத்

வசூலிலும் சாதனை படைத்து வரும் இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநர் விவேக் அக்னிகோத்ரிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவருடைய அடுத்த படத்தில் கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

இதுபற்றி விவேக் அக்னிகோத்ரி கூறும்போது, ’என் படங்களுக்கு எப்போதும் நட்சத்திரங்கள் தேவையில்லை. நடிகர்கள் மட்டும்தான் தேவை. 12 வருடத்துக்கு முன் என் சினிமா பயணத்தைத் தொடங்கியபோது, என்ன மாதிரியான படங்களை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தேனோ, அதில் உறுதியாக இருக்கிறேன். அதன்படி ஹீரோ, ஹீரோயின்களை மையப்படுத்திய படங்களை ஒரு போதும் இயக்க மாட்டேன். சினிமா என்பது எழுத்தாளர் மற்றும் இயக்குநரின் ஊடகம் என்பதை உறுதியாக நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE